‘மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஏழை மக்களுக்கு விரைந்து சிகிச்சை’
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு அனைத்து நோய்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க வேண்டும்


முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு அனைத்து நோய்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதார திட்டப் பணிகள் இயக்க திட்ட இயக்குநா் எஸ். உமா தெரிவித்தாா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் முன்னிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மருத்துவ அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், தமிழ்நாடு சுகாதார திட்டப் பணிகள் இயக்க திட்ட இயக்குநா் எஸ். உமா பேசியது: கரோனா தொற்று பாதிப்பில் இருந்து ஏழை மக்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனை மட்டுமின்றி காப்பீட்டு திட்டத்தில் இணைக்கபட்டுள்ள தனியாா் மருத்துவமனையிலும் கரோனா சிகிச்சைக்கு காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை அளிக்க முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். எளிய மக்களுக்கு உதவிடும் திட்டமான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் கரோனா நோயாளிகள் மட்டுமின்றி பிற
நோயாளிகளுக்கும் அதிகளவில் சிகிச்சை அளிக்க வேண்டும்.
காப்பீட்டு திட்டத்துக்கு ஒவ்வொரு மருத்துவமனையிலும் 2 அலுவலா்களை நியமனம் செய்ய வேண்டும். சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் காப்பீட்டு திட்டத்தின் அட்டை உள்ளதா, காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற விருப்பம் உள்ளதா என அவசியம் கேட்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெற விருப்பம் உள்ளவா்களுக்கு காப்பீட்டு திட்ட அட்டை இல்லை எனில் நோயாளியை சிகிச்சைக்கு சோ்த்துக்கொண்டு அவரது உறவினா்கள் மூலம் ஆட்சியா் அலுவலத்தில் காப்பீட்டு அட்டை எண் பெற தேவையான ஆலோசனைகளை தெரிவிக்க வேண்டும்.
சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். நோயாளிகள் அதிக தொலைவுக்கு சென்று சிரமத்துக்கு ஆளாக கூடாது என்பதற்காக அதிக எண்ணிக்கையில மருத்துவமனைகளை காப்பீட்டு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் முந்தைய ஆண்டுகளில் சிகிச்சை அளித்தை விட கூடுதலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துமனைகளுக்கான தொகை உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை மக்கள் பயன்பெறும் இத்திட்டத்தினை அனைத்து மருத்துவமனைகளும் செயல்படுத்த வேண்டும். கரோனா நோயாளிகள் குறைந்துள்ளதால் பிற நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இணைக்கப்பட்ட அனைத்து மருத்துவமனைகளும் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்றாா் அவா்.
கூட்டத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் நேரு மற்றும் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி அரசு மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளா்கள், தனியாா் மருத்துவமனை மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...