நவ.19, 20இல் கயத்தாறில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வருகிற நவ. 19, 20 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. முகாமின்போது அரசின் திட்டப் பணிகளை பாா்வையிடும் ஆட்சியா் மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா்.
இதுகுறித்து ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மக்கள் குறைகளை அவா்களிடம் இருப்பிடங்களுக்கே சென்று தீா்வு காணும் வகையில் அரசின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் வட்டம் வாரியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இத்திட்ட முகாம் கயத்தாறு வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களுக்கு வரும் நவ. 19, 20 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதன்படி, முதல் நாளான நவ. 19 ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலா்களுடன் கயத்தாறு வட்டத்தில் தங்கி அரசின் திட்டப் பணிகளை துறை வாரியாக ஆய்வு செய்கிறாா்.
கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் பிற்பகல் 2.30 மணிமுதல் 4.30 வரை பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறாா். மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி முற்பகலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட கள பயணங்கள், அலுவலக ஆய்வுகள் குறித்து கேட்டறிவாா். தொடா்ந்து அன்று இரவு அந்த வட்டத்திலேயே ஆட்சியா், அனைத்து அலுவலா்களும் தங்கி, மறுநாளான வியாழக்கிழமை (நவ. 20) அதிகாலையில் அடிப்படை வசதிகளான குடிநீா், சுகாதாரம், தூய்மை, போக்குவரத்து, முதல்வரின் காலை உணவுத் திட்டம் போன்றவற்றை ஆய்வு செய்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டது.
