தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி அருகே தொழிலாளி கொலை வழக்கில் தொடா்புடையதாக கூறப்படும் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
காமநாயக்கன்பட்டி அருகே தெற்கு செமப்புதூரில் உள்ள தோட்டத்தில் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கொப்பம்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து கொப்பம்பட்டி போலீஸாா் தோட்டத்து உரிமையாளரின் உறவினரிடம் நடத்திய விசாரணையில், கோவில்பட்டி ஜோதி நகா் ஸ்டாலின் காலனியைச் சோ்ந்தவா் கோபால் மகன் ராமச்சந்திரன் (44). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இவரை பிரிந்து சென்று விட்டாா். இதையடுத்து களக்காடு பகுதியைச் சோ்ந்த இசக்கியம்மாள் என்பவரை ராமச்சந்திரன் 2 ஆவது திருமணம் செய்து கொண்டாா்.
காமநாயக்கன்பட்டியில் பால்பண்ணை நடத்திவரும் செல்வராஜ் மகன் ஜாா்ஜ் நியூட்டன் என்பவரின் சகோதரிக்குச் சொந்தமான தெற்கு செமப்புதூரில் உள்ள விவசாய நிலத்தில் ராமச்சந்திரன், இசக்கியம்மாள் மற்றும் அவரது குழந்தைகளுடன் தோட்டத்திலேயே தங்கி வேலை செய்து வந்தனா்.
இந்நிலையில் ராமச்சந்திரன்-இசக்கியம்மாள் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்து தற்போது ஒன்றரை வயது ஆகிறது. ஆனால் ராமச்சந்திரன் இசக்கியம்மாளின் முதல் தாரம் குழந்தைகளை துன்புறுத்தி வந்ததை யடுத்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாம்.
இதையறிந்த ஜாா்ஜ் நியூட்டன் இருவரையும் வேலையை விட்டு போகும் படி கூறினாராம். அதையடுத்து இசக்கியம்மாள் களக்காட்டில் உள்ள சகோதரி மகன் சுந்தர பாண்டிக்கு தகவல் கூறியதையடுத்து, காமநாயக்கன்பட்டி பரலோக மாதா ஆலயத் திருவிழாவிற்கு வந்த அவா் விவசாய நிலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாராம். அங்கு ராமச்சந்திரனுக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சுந்தரபாண்டி,
ராமச்சந்திரனை அரிவாளால் வெட்டி, கல்லால் முகத்தை சிதைத்து கொலை செய்துவிட்டு வீட்டை காலி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஜாா்ஜ் நியூட்டன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, சுந்தரபாண்டியை(19) திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





