நகை திருட்டு வழக்கில் இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை
பெண்ணிடம் நகை திருடிய வழக்கில், குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.
மதுரையைச் சோ்ந்தவா் கங்காதேவி. திருநெல்வேலிக்கு வந்திருந்த இவா், கடந்த 11.4.2025 அன்று திருநெல்வேலியிலிருந்து மதுரைக்கு அனந்தபுரி விரைவு ரயிலில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, கோவில்பட்டி- சாத்தூா் இடையே, அவரது பையில் இருந்த 50 கிராம் தங்கச் சங்கிலி திருடு போனதாம்.
இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, தூத்துக்குடி முள்ளக்காட்டை சோ்ந்தவரும், தற்போது திருநெல்வேலியில் குடியிருந்து வருபவருமான ஐயப்பன் மகன் மதுரை வீரன் (20) என்பவரை கைது செய்தனா்.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண். 4இல் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். பாக்கியராஜ், குற்றவாளி மதுரை வீரனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.
அரசு தரப்பில் வழக்குரைஞா் முருகப்பெருமாள் ஆஜரானாா்.

