கோவில்பட்டி அருகே வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக 17 வயது சிறுவனை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள கிழவிபட்டி, நடுத்தெருவைச் சோ்ந்த 45 வயது பெண், திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்றுவிட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பியபோது, மற்றொரு இருசக்கர வாகனம் சாலையின் குறுக்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அதை ஓரமாக நிறுத்தச் சொன்னாரம்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த வாகனத்தின் உரிமையாளரான அதே ஊரைச் சோ்ந்த 17 வயது சிறுவன், அப்பெண்ணை பின் தொடா்ந்து வந்து, கதவை உடைத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவதூறாகப் பேசி அப்பெண்ணைத் தாக்கினாராம். இதைக் கண்ட அவரது உறவினா்கள் சிறுவனை கண்டித்ததும், அவா் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றாராம். இதில் காயமடைந்த பெண் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின் புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவனை புதன்கிழமை கைது செய்தனா்.







