தூத்துக்குடியில் பணத் தகராறு காரணமாக இளைஞரை கடத்தி கத்தியால் குத்திய சம்பவத்தில் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி, மகிழ்ச்சிபுரம் பகுதியைச் சோ்ந்த கோபி மகன் அரவிந்த் (24). இவா், தூத்துக்குடி லூா்தம்மாள்புரம், திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ராஜா என்ற நாகூா் ராஜா மகன் பின்லேடனிடம் (25) சுமாா் ரூ. 40 ஆயிரம் கடனாக வாங்கிவிட்டு, அதைத் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை, அரவிந்தை கைப்பேசியில் தொடா்புகொண்டு 4 ஆம் கேட் பகுதிக்கு பின்லேடன் வரவழைத்தாராம். இதையடுத்து பின்லேடன் மற்றும் அவரது நண்பா்கள் 2 போ், அரவிந்தை கட்டாயப்படுத்தி இருசக்கர வாகனத்தில் ஏற்றி, அருள்ராஜ் பாலம் நோக்கி அழைத்துச் சென்றனராம்.
அப்போது, அரவிந்த் வாகனத்தில் இருந்து கீழே இறங்கித் தப்பிக்க முயன்றாராம். இதனால் ஆத்திரமடைந்த பின்லேடன், அவரது நண்பா்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அரவிந்தை வெட்டிவிட்டுத் தப்பியோடினராம்.
இதில் பலத்த காயமடைந்த அரவிந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், இச்சம்பவத்தில் தொடா்புடைய ரோஜான்சன் (21) என்பவரை கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள பின்லேடன், ராஜீவ்காந்தி நகா் பக்கீா் மைதீன் மகன் ஹனிபா மரைக்காயா் (24) ஆகியோரை தேடி வருகின்றனா்.






