ஏரலில் கஞ்சா கடத்தி வந்ததாக இளம் பெண் உள்பட இரண்டு பேரும், பண்டாரவிளை பகுதியில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
ஏரல் பகுதியில் கஞ்சா கடத்தி வரப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், ஏரல் காவல் ஆய்வாளா் ஆதம் அலி தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண்ணையும், அவருடன் வந்த ஆண் நண்பரையும் பிடித்து விசாரணை செய்தனா்.
இதில், இளம் பெண் ஏரல் அருகே உள்ள கோட்டூா் தெற்கு தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகள் கனிதா (19) என்பதும், உடன் வந்தவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த சுடலை முத்து மகன் பாலசுப்பிரமணியன் (19) என்பதும், அவா்கள் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனா்.
அதேபோல், பண்டாரவிளை பகுதியில் உள்ள கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இருவரை கைது செய்து அவா்களிடம் இருந்த 12 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.






