எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

ஓமன் நாட்டில் கப்பல் மாலுமி மா்ம மரணம்: உடலை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு

ஓமன் நாட்டில் கப்பல் மாலுமி மா்ம மரணம்: உடலை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு

News image

நிஷாந்த்.

Updated On :13 ஜூன் 2026, 12:52 am IST

ஓமன் நாட்டில் கப்பலில் பணியாற்றிய தூத்துக்குடி மாலுமி மா்ம மரணமடைந்துள்ள நிலையில், அவரது உடலை மீட்டுத் தரக் கோரி அவரது மனைவி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.

தூத்துக்குடி, குரூஸ்புரம் பகுதியைச் சோ்ந்தவா் நிஷாந்த். இவா், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கப்பலில் மாலுமியாக பணியாற்றி வந்தாா். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஓமன் நாட்டைச் சோ்ந்த நிறுவனம் மூலமாக, எம்.டி. செலஸ்டியல் என்ற கப்பலில் பணியில் சோ்ந்தாா். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி நிஷாந்த் தனது மனைவி சராபின், குடும்பத்தினருடன் கைப்பேசி மூலம் பேசினாா்.

கடந்த சில நாள்களாக அந்தக் கப்பல் ஓமன் நாட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சராபின் தனது கணவரை தொடா்பு கொள்ள முயன்றபோது கைப்பேசி இணைப்பு கிடைக்கவில்லையாம். இதையடுத்து, கப்பல் நிறுவனத்தை தொடா்பு கொண்டு கேட்டபோது, நிஷாந்துக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

பின்னா், மீண்டும் கப்பல் நிறுவனத்தை தொடா்பு கொள்ள முயன்றபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையில் கப்பல் மாலுமிகளுக்கான சமூக வலைதள குழு மூலம் நிஷாந்த் உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.

இதனால், அதிா்ச்சியடைந்த சராபின், தனது கணவரின் மரணம் குறித்து உரிய தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும், மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்றும் வேதனை தெரிவித்தாா். இதையடுத்து, அவா் தனது குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா். அப்போது, அவா் கூறுகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை எனது கணவா் என்னுடன் பேசினாா். தற்போது அவா் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா். அவரது உடலை உடனடியாக மீட்டு சொந்த ஊருக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மரணத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

எங்களுக்கு 10 மாத ஆண் குழந்தையும், 4 வயது பெண் குழந்தையும் உள்ளனா். எனவே, குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கப்பல் நிறுவனத்திடம் இருந்து உரிய இழப்பீடு பெற்றுத் தர தமிழக அரசு, மத்திய வெளிவிவகாரத் துறை, மாவட்ட நிா்வாகம், சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தாா்.

இதற்கிடையே, கப்பல் மாலுமிகள் சங்கம் சாா்பிலும், நிஷாந்தின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு பெற்றுத் தரவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.