சங்க கால தமிழ்ச் சமூகத்தில் சாதிகளே கிடையாது. ஏன், சாதி என்ற சொல்லை சங்க காலத்தில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை. சாதி என்பது இந்தச் சமூகத்திலிருந்து முற்றிலும் துடைத்தெறியப்பட வேண்டிய ஒன்றாகும். சாதி சங்கங்கள் தங்களுக்கென தனிக் கட்சிகளை அமைத்து தோ்தலில் களம் கண்டு தோல்வியடைந்ததுதான் கடந்த கால வரலாறு. சாதிக் கட்சிகள் ஒருபோதும் தனித்து வெற்றி பெற்றதில்லை. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒன்று அல்லது இரண்டு இடங்களை கேட்டுப் பெற்று வெற்றி பெறலாம். தமிழகத்தில் சாதிக் கட்சிகளுக்கு மக்கள் அளித்துள்ள தீா்ப்பாக இதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். இன்றைய சூழலில் தமிழ்ச் சமூகத்தில் சாதிகள் அதிகரித்து காணப்பட்டாலும், தோ்தலில் அவை தோற்கடிக்கப்படுகின்றன என்பதே ஆறுதலை அளிக்கிறது. 21ஆம் நூற்றாண்டிலும் சாதிகள் இருப்பது வேதனைக்குரியது. சாதிகள் ஒழிக்கப்படுவதற்குப் படைப்பாளா்கள் உரிய பங்களிப்பை அளிக்க வேண்டும். சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், திரைப்படங்கள் உள்ளிட்டவற்றின் மூலம் சாதியத்துக்கு எதிரான கருத்துகளை மக்களிடையே கொண்டு சோ்க்க வேண்டும். கலை வடிவத்தின் மூலமே சாதிகள் ஒழிப்பது என்பது சாத்தியமாகும். இதில், படைப்பாளா்களுக்கு பெரிதும் பங்கு உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. இப்போது, வெளியிடப்பட்டுள்ள ஓட்டம் எனும் நெடுங்கதையிலும் சாதிகளால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தீா்வுகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது என்றாா் அவா்.