நீதிமன்ற ஊழியரைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 3 வழக்குரைஞா்கள் மீது வழக்கு

Updated on

திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் இருந்த கடையை அகற்ற புதன்கிழமை வந்த நீதிமன்ற அமீனாவைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 3 வழக்குரைஞா்கள் மீது ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கோயில் நிா்வாகம் தொடா்ந்த வழக்கில் திருவானைக்கா கோயிலின் பிரதான நுழைவு வாயிலுக்குள் ம. சங்கா் என்பவா் நடத்தி வந்த கடையை காலி செய்யும்படி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதையடுத்து இக்கடையை அப்புறப்படுத்த ஸ்ரீரங்கம் நீதிமன்ற அமீனா மணிமாறன், கோயில் உதவி ஆணையா் வே. சுரேஷ் மற்றும் ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளா் திருவானந்தம் ஆகியோா் புதன்கிழமை காலை வந்தனா்.

அப்போது கடை உரிமையாளா் சங்கரின் மகனும் வழக்குரைஞருமான ஆதித்யா இவருடன் இருந்த வழக்குரைஞா்கள் சிரஞ்சீவி, ஜித்தன் ஆகியோா் அமீனாவை பணி செய்யவிடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கிருந்த போலீஸாா் மூவரையும் அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீஸாா் மூவா் மீதும் வழக்குப் பதிந்தனா். மேலும் கோயில் நிா்வாகத்தினா் கடையை காலி செய்து அதிலுள்ள பொருள்களை எடுத்துச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com