நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்: திருவையாறிலிருந்து சுவாமி புறப்பாடு

அரியலூர் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாண உற்ஸவத்தையொட்டி, திருவையாறு
Updated on
1 min read


அரியலூர் மாவட்டம், திருமழபாடி வைத்தியநாதசுவாமி திருக்கோயில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாண உற்ஸவத்தையொட்டி, திருவையாறு அய்யாறப்பர் கோயிலிலிருந்து சுவாமி-அம்மன், நந்தியெம்பெருமான் புறப்பாடு சனிக்கிழமை நடைபெற்றது.
திருவையாறை அடுத்த அந்தணர்குறிச்சியில் நந்தியெம்பெருமான் பிறப்பு விழா வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நந்தியெம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால் போன்ற திரவியங்களைக் கொண்டு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து திருவையாறு அறம்வளர்த்த நாயகி உடனுறை அய்யாறப்பர் திருக்கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வருதலும் நடைபெற்றது. தொடர்ந்து சனிக்கிழமை காலை கண்ணாடி பல்லக்கில் அய்யாறப்பர்- அறம் வளர்த்த நாயகியும்,  பட்டுவேட்டியுடன் மாப்பிள்ளை கோலத்தில் நந்தியெம்பெருமான் குதிரை வாகனத்தில் வாணவேடிக்கை,  இன்னிசை கச்சேரியுடன் திருமழபாடிக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிபுறப்பாட்டில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி  நந்தியெம்பெருமானுடன் திருமழப்பாடி சென்ற அய்யாறப்பர்- அறம் வளர்த்த நாயகி அம்மன்  சனிக்கிழமை இரவு நடைபெற்ற சுயசாம்பிகை- நந்தி திருக்கல்யாண உற்சவத்தில் பங்கற்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.   இரவு சுவாமி-அம்மன் புறப்பாடாகி திருக்கோயிலை வந்தடைவர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com