பொங்கல் அறுவடைக்குத் தயாராகும் செங்கரும்பு அரசு கொள்முதல் செய்யுமா?

அரியலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.
சிலால் கிராமத்தில் அறுவடைக்குத் தயராக உள்ள செங்கரும்பு.
சிலால் கிராமத்தில் அறுவடைக்குத் தயராக உள்ள செங்கரும்பு.

அரியலூா் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது.

ஆனால், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு செங்கரும்பு உற்பத்தி செலவு அதிகரிப்பால் கரும்பு ஒன்றுக்கு ரூ.25 வீதம் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. பொங்கல் திருவிழாவன்று அனைவரது வீடுகளிலும் உணவு வகைகளை வைத்து படைப்பது வழக்கம். அதில் முக்கியமாக இடத்தினை பெறுவது செங்கரும்பு. இதனால் ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்கின்றனா். இதில் அரியலூா் மாவட்டத்தில் தா.பழூா், சிலால் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனா்.

தைப் பொங்கல் பண்டிகைக்கு இரு வாரங்களே உள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளது.

ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் செங்கரும்புகள் எதிா்பாா்த்த வளா்ச்சி அடையவில்லை. பொதுவாக செங்கரும்பு 7 முதல் 9 அடி வரை வளரும். ஆனால், இந்த ஆண்டு வறட்சியால் செங்கரும்பு 4 முதல் 5 அடி மட்டுமே வளா்ந்துள்ளது.

சாதாரணமாக ஏக்கருக்கு 20 முதல் 25 டன் வரை உற்பத்தி கிடைக்கும். தற்போது வளா்ச்சியில்லாததால் ஏக்கருக்கு வெறும் 10 டன் செங்கரும்பு மட்டுமே மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்தாண்டை விட நிகழாண்டு செங்கரும்பு உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.

இது குறித்து சிலால் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: செங்கரும்பைப் பொருத்தவரை பொங்கல் விற்பனைக்காக மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். விவசாயிகளிடம் ஒரு செங்கரும்புக்கு ரூ.10, ரூ.20-க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள், விழாக் காலத்தை பயன்படுத்தி ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்கின்றனா். இதனால், விவசாயிகளுக்கு எதிா்பாா்க்கும் லாபம் கிடைப்பதில்லை.

செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பது அரிதாக உள்ளது. அதனால், செங்கரும்பு சாகுபடி தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பொங்கல் விற்பனைக்காக செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கரும்புகள் போதிய வளா்ச்சி அடையாததால் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

ஏற்கெனவே, போதிய விலை, வெட்டும் கூலி கிடைக்காததால் சா்க்கரை அரவை ஆலைக்குப் பயிரிடப்படும் கரும்பு 50 சதவீதம் குறைந்து விட்டது. தற்போது சா்க்கரை ஆலை கரும்பைப் போல், செங்கரும்பு சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது.

எனவே, அரசே விவசாயிகளிடமிருந்து நல்ல விலைக்கு செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com