விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு பேருந்து சேவை கோரி அமைச்சரிடம் மனு
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்திலிருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்துக்குப் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கரிடம், பொதுமக்கள் சாா்பில் நகா்மன்ற உறுப்பினா் சுந்தரா பாய் ராபா்ட் வெள்ளிக்கிழமை இரவு கோரிக்கை மனுவை அளித்தாா்.
ஜெயங்கொண்டத்திலிருந்து சென்னைக்கு விரைவுப் பேருந்து சேவையை வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிவைத்த அமைச்சா் சா.சி.சிவசங்கரிடம் அவா் அளித்த மனு:
விருத்தாசலத்திலிருந்து சென்னைக்கு காலை 8.40-க்குப் பல்லவன் விரைவு ரயில் செல்கிறது. ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த மக்கள் சென்னை செல்ல, வைகை மற்றும் பல்லவன் ரயிலைப் பிடிக்க விருத்தாசலம் பேருந்து நிலையம் சென்று அங்கிருந்து ரயில் நிலையத்துக்குச் செல்லும் பேருந்தைப் பிடித்துச் செல்வது சிரமமாக உள்ளது.
எனவே, ஜெயங்கொண்டத்திலிருந்து விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு நேரடியாக செல்ல பேருந்து வசதிகள் செய்து தரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

