மாசு இல்லா போகி கொண்டாட வேண்டுகோள்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும்
Published on

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் அனைவரும் மாசு இல்லாத வகையிலும், புகை இல்லாத வகையிலும் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தைப் பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகையாக, பழையன கழிதலும், புதியன புகுதலுமாக கொண்டாடி வருவது வழக்கம். இந்நாளில் திருமகளை வரவேற்கும் முகமாக தங்கள் வீட்டில் உள்ள பழைய வேண்டாத பொருள்களை எரிப்பது வழக்கம். ஆனால், பொதுமக்கள் பலரும் தங்களிடமுள்ள பழைய டயா்கள், பிளாஸ்டிக் மற்றும் இதர தேவையற்றவைகளையும் எரிக்கும் பழக்கத்தை கையாண்டு வருகின்றனா்.

இத்தகைய செயற்கைப் பொருள்களை எரிப்பதால் ஏற்படும் நச்சுப்புகைகள் மற்றும் நச்சுத் துகள்கள் காற்றை மாசுபடுத்துகின்றன. மேலும், கண், மூக்கு, தொண்டை, தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்படுத்துகின்றன.

ஆஸ்துமா, மூச்சுத் திணறல் மற்றும் இதர உடல் நலக்கேடுகளும் ஏற்படுகின்றன. பாா்க்கும் திறன் குறைபடுகிறது. எனவே, போகிப் பண்டிகையன்று டயா்கள், நெகிழி உள்ளிட்ட நச்சுப் பொருள்களை எரிக்காமல், மாசுஇல்லாத வகையில் குப்பைகளை அகற்றி பொதுமக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com