கரூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக 11 கிராமங்களில் 1,002 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்தார்.
கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்துக்கு கிராம அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் கடந்த 2011-இல் துவங்கப்பட்ட இத்திட்டத்தில், 2017-18-இல் கரூர் மாவட்டத்தில் 32 கிராமங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் வழங்கப்படுகிறது.
இதில், மூன்றாம் கட்டமாக 11 கிராமங்களில் 1002 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக வரும் 19-ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் அந்தந்த கிராமங்களில் நடத்தப்படும். இதில், பொதுமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். பயனாளிகள் பெண் உறுப்பினராகவும், ஏழ்மையானவராகவும் இருத்தல் வேண்டும். நிலமற்ற விவசாய தொழிலாளராக இருக்க வேண்டும். அந்த கிராமத்தில் நிரந்தர குடியிருப்பவராகவும், குடும்பத்தில் ஒரு நபரேனும் 18 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். தற்போது சொந்தமாக ஆடு, மாடு, செம்மறியாடு வைத்திருக்க கூடாது. மேலும் பயனாளியோ, அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அரசுப் பணியிலோ, பொதுத்துறை மற்றும் கூட்டுறவுத்துறையிலோ பணிபுரிபவராக இருத்தல் கூடாது. இதேபோல், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளாக பதவி வகிப்பவராகவும் இருத்தல் கூடாது என்றார்.இக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் திரளாக பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.