டெங்கு தடுப்பு பணியில் 3,450 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்தார்.
ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை டெங்கு தடுப்புப் பணிகள் மேம்பாடு தொடர்பாக அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியர் மேலும் பேசியது:
டெங்கு காய்ச்சல் ஏற்பட காரணமான கொசு நல்ல தண்ணீரில் லார்வா, மீப்பா, அடல்ட் கொசு என்ற முறையில் உற்பத்தியாகிறது. 7 நாட்கள் சேமித்து வைக்கும் நீரில் இது உருவாகிறது. இதை அழிக்கும் பணியில் குறுவட்ட அளவில் 50 குடியிருப்புகளுக்கு ஒரு குழு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இப்பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், சாரண, சாரணீயர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் என மொத்தம் 3,450 பேர் இப்பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
டெங்கு குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077-க்கு தகவல் தெரிவிக்கலாம். 24 மணிநேரமும் இந்த தகவல் மையம் இயங்கும். மேலும் ஆன்லைனில் dengu.collrkrr@gmail.com என்ற இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.