தங்களின் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கரூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 7 இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம்பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
அதன்படி, கரூர் மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பெரும்பாலானோர் செவ்வாய்க்கிழமை பணிக்குச் செல்லவில்லை. கரூர் வட்டாட்சியரகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணன் தலைமை வகித்தார்.
இதுபோல, தாந்தோணிமலை தொடக்கக் கல்வி அலுவலகம் முன் காவல்துறை அமைச்சுப்பணியாளர் சங்கத்தலைவர் முருகன் தலைமையிலும், சிந்தாமணிப்பட்டியில் ஒன்றிய
ஒருங்கிணைப்பாளர் முருகேசன் தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன் மாவட்டத்தலைவர் செல்லமுத்து தலைமையிலும், அரவக்குறிச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி தலைமையிலும், குளித்தலை வட்டாட்சியர் அலுவலகம் முன் குளித்தலை ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஊராட்சி சபைக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கிறது. திமுக ஆட்சிக்குவந்தவுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றித்தரப்படும் எனத் தெரிவித்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
போராட்டம் தொடரும் : புதன், வியாழக்கிழமை வட்ட அளவில் மறியலும், வெள்ளிக்கிழமை மாவட்டத்தலைநகரங்களில் மறியல் செய்வோம்.
எங்களதுபோராட்டத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 3,200 அரசு ஊழியர்களில் 2500 பேர் செவ்வாய்க்கிழமை பணிக்குச் செல்லவில்லை. அதேபோல ஆசிரியர்களில் சுமார் 5600 பேரில் 4,000 பேர் செல்லவில்லை என்றார் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகாவிஷ்ணன்.
ஆசிரியர்கள் போராட்டத்தினால் பெரும்பாலான பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனர். அரசு அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









