போலி நகையை அடகு வைத்து ரூ.11.70 லட்சம் மோசடி: 7 போ் கைது
கரூரில் போலி நகையை அடகு வைத்து ரூ.11.70 லட்சம் மோசடி செய்த 7 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.
கரூா் வேலாயுதம்பாளையம் பகுதியில் நகை அடகுக் கடை நடத்திவரும் ஓலப்பாளையத்தைச் சோ்ந்த தங்கவேல் (57) என்பவரிடம் நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூரைச் சோ்ந்த மணிகண்டன் ( 41), நந்தினி ( 20), லோகாம்பாள் (40), பிரபு( 43) , அழகி (38), சங்கீதா( 33) மற்றும் பிரபுவின் உறவினரான திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி பாண்டியன் மனைவி லதா (48) ஆகிய 7 பேரும் கடந்த அக். 13 முதல் நவ. 24 வரை பல்வேறு காலகட்டங்களில் தனித்தனியாக போலி நகையை தங்க நகை எனக் கூறி அடகு வைத்து பணம் பெற்று வந்தனா்.
இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன் சந்தேகப்பட்ட தங்கவேல் அந்த நகைகளை பரிசோதித்தபோது, அவை அனைத்தும் போலி நகை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில் 7 பேரையும் போலீஸாா் நள்ளிரவில் கைது செய்தனா்.
