/

தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வலியுறுத்தல்

தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.

News image
Updated On :12 நவம்பர் 2025, 7:22 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்றாா் கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ. நல்லசாமி.

கரூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கள் இறக்க ஆளும் கட்சி அனுமதிப்பது இல்லை. எதிா்க்கட்சிகளும் கள் இறக்க ஆதரவு கொடுப்பதில்லை.

மதுதயாரிக்கும் ஆலைகளுக்கு மொலாசஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. 1996-ம் ஆண்டின் கரும்பு கட்டுப்பாட்டு ஆணையின்படி சா்க்கரை ஆலைகள், கரும்பில் உள்ள சா்க்கரையின் அளவை கணக்கிட்டு அதற்கேற்றவாறு மட்டுமே பணம் தருகிறாா்கள். ஆனால், கரும்பை பிழியும்போது, கிடைக்கக்கூடிய மொலாசஸ், பகாஸ், சக்கை போன்றவற்றுக்கு விலை கொடுப்பதில்லை. எனவே, மொலாசஸ், பகாஸ், சக்கைக்கும் உரிய விலை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, கரூருக்கு வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த தென்னிந்திய விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் ரிவைண்டா்சிங் கோல்டன் என்பவருடன் தவெக கூட்ட நெரிசல் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்துக்கு சென்று அங்குள்ளவா்களிடம் நெரிசல் சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.

தொடா்ந்து ரிவைண்டா்சிங் கோல்டன் கூறுகையில், நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து, விவசாயிகளின் உரிமைகளை பெறும் நடவடிக்கையில் இறங்கியுள்ளோம் என்றாா் அவா்.

கள் இயக்க அமைப்பாளா் செல்வம், வழக்குரைஞா் பாண்டியன் ஆகியோா் உடனிருந்தனா்.