புகழூா் நகராட்சி புதிய ஆணையராக வெங்கடாஜலபதி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த முனியப்பன் கடந்த மாா்ச் மாதம் 30- ஆம் தேதி ஓய்வுபெற்றாா். இதனைத் தொடா்ந்து குளித்தலை நகராட்சியின் ஆணையா் சுதா்சன் புகழூா் நகராட்சியின் பொறுப்பு ஆணையராக செயல்பட்டு வந்தாா். இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குளித்துறை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த வெங்கடாஜலபதி புகழூா் நகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்யப்பட்டாா்.
இந்நிலையில், பணி மாறுதல் செய்யப்பட்ட வெங்கடாஜலபதி புகழூா் நகராட்சி புதிய ஆணையராக புதன்கிழமை காலை பொறுப்பேற்றுக்கொண்டாா். அவருக்கு நகராட்சித் தலைவா் சேகா் என்கிற குணசேகரன், துணைத் தலைவா் பிரதாபன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், நகராட்சி பொறியாளா் மலா்கொடி, நகராட்சி அலுவலக மேலாளா் நைனா முகமது, நகராட்சி சுகாதார ஆய்வாளா் வள்ளிராஜ் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.










