தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பஞ்சப்பட்டியில் உள்ளது. 1837இல் கடவூா் ஜமீன்தாா் ஆளுகைக்குட்பட்டிருந்த திண்டுக்கல் மாவட்டத்தின், கடவூா்(தற்போது கரூா் மாவட்டம்) வனப்பகுதியில் மழை காலங்களில் வடக்கு நோக்கி ஓடிவரும் காட்டாற்று தண்ணீரை சேமிக்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் வட்டம் பஞ்சப்பட்டியில் 1,217 ஏக்கா் பரப்பளவில் 44 மீட்டா் உயரத்தில், 2,050 மீட்டா் கரையை கொண்டு ஏரி அமைக்கப்பட்டது. 1.5 டி.எம்.சி தண்ணீா் சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த ஏரிக்கு மழைக் காலங்களில் பாலவிடுதி, தரகம்பட்டி, மைலம்பட்டி, சிந்தாமணிபட்டி வழியாக அப்பகுதிகளில் உள்ள 24 ஏரிகள், 124 குளங்களை நிரம்பிய பிறகு கடைசியாக பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் வந்தது. இந்த ஏரி நிரம்பி வெளியேறும் உபரி நீா் மாயனூரில் காவிரி ஆற்றில் இருந்து பிரியும் தென்கரை வாய்க்காலுக்குச் சென்று திருச்சி மாவட்டத்தின் குடமுருட்டி அருகே காவிரி ஆற்றில் சென்று கலக்கிறது.