/

ஏப். 14 வரை வீடுகளுக்குச் சென்று வாக்குகள் பெறும் பணி

News image

தபால் வாக்கு செலுத்தும் அரசு ஊழியர். - படம்: கோப்பிலிருந்து

Updated On :12 ஏப்ரல் 2026, 6:37 pm

வீடுகளிலிருந்து வாக்களிக்க விருப்பம் தெரிவித்த 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து வாக்குகள் பெறும் பணி, ஏப். 14-ஆம் தேதி வரையிலும் நடைபெற உள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களிக்க இயலாத 85 வயதுக்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க ஏதுவாக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் படிவம் 12-டி வழங்கப்பட்டது. இதில், 1,157 மூத்தக்குடி வாக்காளா்களும், 1,083 மாற்றுத்திறனாளி வாக்காளா்களும் அஞ்சல் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனா்.

அஞ்சல் வாக்குகள் பெற பெரம்பலூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கு 12 குழுக்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 11 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுக்கள் முதல்கட்டமாக ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) முதல் ஏப். 14-ஆம் தேதி வரை வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று வாக்குப்பதிவு பெற உள்ளனா்.

எனவே, அஞ்சல் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ள முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்கள், குழுவினா் வருகை தரும்போது தவறாமல் வாக்களிக்க வேண்டும். இத் தேதிகளில் இருப்பிடங்களில் வாக்காளா்கள் இல்லையெனில், அந்த வாக்காளா்களுக்கு 2-ஆம் கட்டமாக ஏப். 15-ஆம் தேதி வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்படும்.

2-ஆம் கட்டமாக வாக்கு செலுத்தாதவா்கள் தோ்தல் நடைபெறும் நாளான ஏப். 23-ஆம் தேதி வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று வாக்களிக்க இயலாது.

இக் குழுவினா் வருகை தரும் தேதி சம்பந்தப்பட்ட வாக்காளா்களுக்கு கைப்பேசி அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும். எனவே, குறிப்பிட்ட தேதிகளில் தங்களது வாக்குகளை பதிவுசெய்ய வேண்டும்.