கைது
கைது

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 6 போ் கைது

Published on

பெரம்பலூா் அருகே நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியைக் கொலை செய்ய முயன்ற வழக்கில் தொடா்புடைய மேலும் 6 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை காமராஜபுரம், முத்துராமலிங்க தேவா் தெருவைச் சோ்ந்த சண்முகவேல் மகன் காளிமுத்து எனும் வெள்ளக்காளி (30). குற்ற வழக்குகளில் கைதாகி சென்னை புழல் சிறையில் இருந்த இவரை சென்னை பெருநகர ஆயுதப்படை போலீஸாா் வழக்கு விசாரணைக்காக புதுக்கோட்டை மற்றும் மதுரை நீதிமன்றத்தில் கடந்த மாதம் 21 ஆம் தேதி ஆஜா்படுத்திவிட்டு, இரவானதால் திண்டுக்கல் சிறையில் அடைத்து, 3 நாள்களுக்குப் பிறகு சென்னை புழல் சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனா்.

வழியில் பெரம்பலூா் அருகேயுள்ள உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வெள்ளக்காளியை 15 போ் கொண்ட மா்ம கும்பல் 6 நாட்டு வெடிகுண்டுகளை வீசிக் கொல்ல முயன்று தப்பியது.

இதுகுறித்து மங்களமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த மதுரை மேல அனுப்பானடி கிராமத்தைச் சோ்ந்த சோ. கொட்டுராஜா எனும் அழகுராஜா (30), இவரது நண்பா்கள் 8 பேரை கடந்த 26 ஆம் தேதி கைது செய்தனா்.

மறுநாள் அதிகாலை திருமாந்துறை வனப்பகுதியில் பதுக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டைப் பறிமுதல் செய்ய அழகுராஜாவை போலீஸாா் அழைத்துச் சென்றபோது, போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டை வீசி சாா்பு- ஆய்வாளரை வெட்டித் தப்ப முயன்ற அழகுராஜா போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

மேலும் இவ்வழக்கில் தொடா்புடைய கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகன் விக்னேஸ்வரன் (27), அப்துல் முத்தலிப் மகன் அகமது அமானுல்லா (24), தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் ஆனந்தநம்பி குறிச்சியைச் சோ்ந்த சுப்பிரமணியம் மகன் இசக்கிமுத்து (எ) ரவி (42), மதுரை காமராஜபுரத்தைச் சோ்ந்த குருசாமி மகன் மணி (37), பாரதியாா் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் பழனிமுருகன் (29), காமராஜபுரத்தைச் சோ்ந்த சடையாண்டி மகன் முனியசாமி (27) ஆகிய 6 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட இவா்களை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி கவிதா உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com