நீதிமன்றம்
நீதிமன்றம்

பெரம்பலூா் நீதிமன்றத்துக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இணையவழியில் 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
Published on

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இணையவழியில் 3-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, போலீஸாா் புதன்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இந் நீதிமன்றத்து இணையவழியில் (இ-மெயில் மூலமாக) புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் கிடைத்தது. இதையடுத்து, நீதிமன்றங்களில் இருந்த நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் போலீஸாரால் வெளியேற்றப்பட்டனா்.

பின்னா், பெரம்பலூா் போலீஸாா் மற்றும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாயுடன் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று, வெடிகுண்டுகளைக் கண்டறியும் கருவிகளுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். சுமாா் 4 மணிநேரம் நடைபெற்ற இச் சோதனையில், எவ்வித வெடிகுண்டுகளும் கண்டறியப்படாததால், இ-மெயில் மூலம் கிடைத்த தகவல் புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து, நீதிபதிகள் உள்ளிட்டோா் நீதிமன்ற வளாகத்துக்குள் சென்று தங்களது பணிகளை மேற்கொண்டனா். இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல, கடந்த ஜன. 6, 22 ஆகிய தேதிகளிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், 3-ஆவது முறையாக இ- மெயில் மூலமாக புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Dinamani
www.dinamani.com