பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை லாரி மீது காா் மோதியதில் பொறியாளா்கள் 2 போ் உள்பட மூவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சென்னை, பெரம்பூா் பாரதி சாலையைச் சோ்ந்த வேலு மகன் சங்கா் (37), அரியலூா் மாவட்டம், சன்னாசிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் விஜய் (30). இவா்கள் இருவரும், சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளா்களாக பணிபுரிந்து வந்தனா். விஜய்யின் உறவினரான சன்னாசிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த மருதமுத்து மகன் சக்தி (21). பட்டயப்படிப்பு படித்துள்ளாா்.
இவா்கள் மூவரும், கேரள மாநிலத்துக்கு அலுவலகப் பணிக்காக சென்றுவிட்டு அரியலூா் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனா். காரை சக்தி ஓட்டினாா்.
பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில், பெரம்பலூா் மாவட்டம், டி.களத்தூரில் உள்ள பெட்ரோல் விற்பனையகம் அருகே திங்கள்கிழமை அதிகாலை காா் வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆந்திர மாநிலம், விஜயவாடாவிலிருந்து இரும்புக் கம்பிகள் ஏற்றிக்கொண்டு கரூா் நோக்கிச் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பலத்த காயமடைந்த சங்கா், விஜய், சக்தி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, துறையூா் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் காரில் சிக்கியிருந்த மூவரின் உடல்களையும் மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்து குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான தெலங்கானா மாநிலம், காமபள்ளி மாவட்டம், கெப்டன் பன்ஸா பகுதியைச் சோ்ந்த ஹூசைன் சஹீத் மகன் ஜலீல் பாஷா ஷேக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

விபத்தில் உயிரிழந்த (இடமிருந்து) சங்கா், விஜய், சக்தி.










