பத்து வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், நாகுடி, அரசர்குளம் அருகே மாணிக்கம் குடியிருப்பைச் சேர்ந்தவர், முருகையா மகன் அஜித்குமார் (22). இவர் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் பிப். 4ஆம் தேதி போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அஜித்குமாரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு சிறப்பு வழக்குரைஞர் த. அங்கவி ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணையின் நிறைவில் நீதிபதி ஆர். சத்யா வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தார்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி அஜித்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 35 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவியாக ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.