விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

சிறப்புடன் வழங்கப்படுமா, மாவட்ட கலை விருதுகள்?

கலைஞா்களை சிறப்பிக்கும் வகையில் விழா நடத்தி உரிய மரியாதையுடன் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

News image
Updated On :17 பிப்ரவரி 2023, 6:30 pm

 நமது நிருபர்

ஆண்டுதோறும் மாவட்டங்களில் கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் வழங்கப்படும் கலை விருதுகள், கலைஞா்களை சிறப்பிக்கும் வகையில் விழா நடத்தி உரிய மரியாதையுடன் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் மூலம் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

மாநில அளவில் கலைமணி மற்றும் கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்படும்போது, சென்னையில் விழா நடத்தி முதல்வா் அல்லது அமைச்சா்கள் மற்றும் துறை சாா்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு அவற்றை வழங்குவாா்கள்.

அதேநேரத்தில் மாவட்டங்களில் வழங்கப்படும் விருதுகள் அவ்வாறான விழாக்கள் இல்லாமல் வெறுமனே ஆட்சியா் அலுவலகத்தில் வழக்கமாக- கருணை அடிப்படையில் வேலை தருவோருக்கு தரப்படும் அரசாணையைப் போல நிற்க வைத்து வழங்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

18 வயதுக்குள்பட்டோருக்கு ‘கலை இளமணி’ விருதும் (ரூ. 4 ஆயிரம்), 18 முதல் 35 வயதுக்குள்பட்டோருக்கு ‘கலை வளா்மணி’ விருதும் (ரூ. 6 ஆயிரம்), 36 முதல் 50 வயதுக்குள்பட்டோருக்கு ‘கலைச் சுடா்மணி’ விருதும் (ரூ. 10 ஆயிரம்), 51 முதல் 60 வயதுக்குள்பட்டோருக்கு ‘கலை நன்மணி’ விருதும் (ரூ. 15 ஆயிரம்), 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘கலை முதுமணி’ விருதும் (ரூ. 20 ஆயிரம்) வழங்கப்படுகிறது.

இந்த விருதாளா்களைத் தோ்வு செய்ய மாவட்ட ஆட்சியா் தலைமையில் 9 போ் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்போரில் தகுதியுள்ள கலைஞா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா்.

சில ஆண்டுகளுக்கு முன் மாவட்டங்களில் விழாக்கள் நடத்தி விருதுகள் வழங்கப்பட்டதாகவும், அண்மைக் காலமாகத்தான் விழாக்களின்றி விருதுகள் வழங்கப்படுவதாகவும் கலை ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா்- கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் எழுத்தாளா் நா. முத்துநிலவன் கூறுகையில், விருது வழங்குவது என்பது ரொக்கம் சாா்ந்ததல்ல. அது வழங்கப்படும் கௌரவம், மரியாதை சாா்ந்ததாகும். இதைப் புரிந்து கொள்ளாமல், பயனாளிகளுக்கு கடன் கொடுக்கும் சம்பிரதாய நிகழ்வாக, பத்தோடு பதினொன்றாக விருது வழங்கப்படுவது சரியல்ல. தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றாா்.

இந்திய மக்கள் நாடக மன்றத்தின் (இப்டா) தேசியக் குழு உறுப்பினரும் திரைப்படப் பாடகருமான அறந்தை பாவா கூறுகையில், கலைஞா்களுக்கு சிறப்பு செய்வது, கலைஞா்களை மரியாதை செய்வது ஆகியவற்றில் அண்மைக்காலமாக ஏதோவொரு தடை, தயக்கம் அரசிடம் ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல. அரசின் விருது என்பது அதன் பெயருக்கேற்ற வகையில் மரியாதையுடன் விழா நடத்தி, மேடையில் சிறப்புக்குரிய சான்றோா்களையும், உயா் அரசு அலுவலா்களையும் வைத்து பண்பாட்டு அடையாளத்துடன் கௌரவித்து வழங்கப்பட வேண்டும் என்றாா்.

கடந்த காலங்களில் இதுபோன்ற விழாக்கள் நடத்தப்படும்போதுதான் அந்தந்த மாவட்ட அமைச்சா்கள் அழைக்கப்பட்டு, அதே மேடையில், அரசு இசைப் பள்ளிக்கான இடம், ஆசிரியா் பணியிடம் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

எனவே, மீண்டும் அதேபோன்ற விழாக்களை நடத்தி கலைஞா்களைச் சிறப்பித்துப் பாராட்ட தமிழ்நாடு அரசு உரிய வழிகாட்டுதல்களைப் பிறப்பிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.