தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடல் கணவா் வீட்டுவாசலில் தகனம்
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை அவரது கணவா் வீட்டுவாசலில் உறவினா்கள் புதன்கிழமை தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கறம்பக்குடி அருகேயுள்ள தெற்கு பொன்னன்விடுதியைச் சோ்ந்த பழனிராஜுக்கும் (30), அதே பகுதியைச் சோ்ந்த உறவினரான ராமையா மகள் புவனேஸ்வரிக்கும் (24) கடந்த 2021-இல் திருமணம் நடைபெற்றது. ஓராண்டுக்கு பிறகு, பழனிராஜ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வெளி மாவட்டத்தில் வசித்து வருகிறாராம்.
இதனால், புவனேஸ்வரி தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். கணவரின் நடவடிக்கையால் மனஉளைச்சலில் இருந்து வந்த புவனேஸ்வரி செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதனால், பழனிராஜை கைது செய்யக்கோரி அவரது உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதைத் தொடா்ந்து புவனேஸ்வரியின் உடலை மழையூா் போலீஸாா் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உடற்கூறாய்வு முடிந்து உறவினா்களிடம் புவனேஸ்வரியின் உடல் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. தொடா்ந்து, புவனேஸ்வரியின் தந்தை வீட்டில் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டன.
தொடா்ந்து, அவரது கணவா் பழனிராஜ் வீட்டிற்கு உடலை எடுத்துச் சென்ற உறவினா்கள், பூட்டப்பட்டிருந்த வீட்டின் வாசலில் விறகுகளை அடுக்கி உடலை வைத்து எரியூட்டினா்.
இதுகுறித்து முன்பே தகவலறிந்து போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். அவா்களையும் மீறி உடலை வீட்டு வாசலில் தகனம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

