புதுக்கோட்டை அருகே உடையாளிப்பட்டியில் திருமணமாகி 2 ஆண்டுகளான பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில், கணவா் குடும்பத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண்ணின் குடும்பத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டியைச் சோ்ந்தவா் குருமூா்த்தி மனைவி காயத்ரி (21). இவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குடும்பப் பிரச்னை காரணமாக அவா் இச்செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
உடற்கூறாய்வுக்குப் பிறகு அவரது உடல் செவ்வாய்க்கிழமையே சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இறந்த பெண்ணின் தந்தை விஜயகுமாா் உள்ளிட்ட உறவினா்கள், புதன்கிழமை உடையாளிப்பட்டி காவல் நிலையம் முன்பு திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தனது பெண்ணின் சாவுக்கு காரணமான அவரது கணவா் குருமூா்த்தி உள்ளிட்டோரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த மறியல் நடைபெற்றது. இதையடுத்து போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்து போகச் செய்தனா்.







