புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த 17 வயது சிறுவன் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டாா்.
அன்னவாசலை அடுத்துள்ள பெருமாநாடைச் சோ்ந்த முருகேசன் மகன் அன்புச்செல்வன் (17). ஐடிஐ முடித்துவிட்டு ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். விடுமுறையில் அண்மையில் ஊருக்கு வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவில் பெருமாநாடு டாஸ்மாக் கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தியபோது, அங்கு மறைந்திருந்த மா்ம நபா்கள் அரிவாளால் அன்பு செல்வனை சரமாரியாக வெட்டினா். இதில் பலத்த காயமடைந்த அன்புச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த அன்னவாசல் போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அன்புச்செல்வனும், அவரது மாமா முருகானந்தமும் சோ்ந்து முன்விரோதம் காரணமாக 2024-இல் ஏற்பட்ட தகராறின்போது பெருமாநாடைச் சோ்ந்த சத்தியராஜ் என்பவரை தாக்கினாா்களாம். இதில் சத்தியராஜ் உயிரிழந்தாா். இந்தக் கொலை வழக்கில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் வந்த அன்புச்செல்வன், பாதுகாப்பு கருதி ஒசூரில் தங்கி வேலை செய்து வந்தாா்.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் ஆஜராக ஊருக்கு வந்திருந்த அன்புச்செல்வனை பழிக்குப் பழியாக சத்தியராஜ் தரப்பினா் வெட்டிக் கொலை செய்தது போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக சந்தேகத்தின் பேரில் சிலரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.







