கலை,அறிவியல் படிப்பு படித்தவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்றார் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கே. ராமசாமி.
தஞ்சாவூர் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசியது:
தகுதி ஒன்றைத்தான் உலகமே எதிர்பார்க்கிறது. மூளையைச் சோதிக்கும் அளவுகோலாக தகுதி உள்ளது. தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் மட்டுமே வாய்ப்புகள் தேடி வரும்.
தன்னம்பிக்கையுடன் குறிக்கோளையும் சரியாக அமைத்து கொண்டால் தகுதியைப் பெற முடியும். வாழ்க்கையை எப்படி அமைக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கு ஏற்றவாறு நம்முடைய வாழ்வு அமையும்.
நம் நாட்டில் 58 சதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். இதனால், இதுவரை பிற நாடுகளிடம் கையேந்தி கொண்டிருந்த நம் நாட்டின் நிலை இப்போது மாறியுள்ளது. பிற நாடுகளுக்கு உதவும் வகையில் நம் நாடு முன்னேறியுள்ளது.
வளர்ந்த நாடுகளின் பார்வை இந்தியா மீதுதான் உள்ளது. இங்கு வாங்கும் சக்தி அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். திறமைமிக்க இளைஞர்கள் நிறைந்த நாடு இந்தியா என்ற பெருமை பெற்றுள்ளது. எனவே, இளைஞர்களை வசப்படுத்துவதற்காக நம் நாட்டை தேடி வளர்ந்த நாடுகள் வருகின்றன. எனவே, தகுதியும், திறமையும் இருந்தால் வாய்ப்புகள் கிடைக்கும். கலை, அறிவியல் துறையில் அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, வேதியியல் படித்தவர்களுக்கு உலக அளவில் வாய்ப்புகள் ஏராளம். இதற்கு அடுத்துதான் பொறியியல், மின்னணுவியல், மருத்துவம் போன்ற படிப்புகளுக்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்றார் ராமசாமி.
விழாவில் 55 ஆய்வியல் நிறைஞர்கள், 402 முதுநிலைப் பட்டதாரிகள், 612 இளநிலைப் பட்டதாரிகள் என மொத்தம் 1,069 பேருக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
கல்லூரிச் செயலரும், தாளாளருமான கே. துளசிஅய்யா வாண்டையார், கல்லூரி முதல்வர் உரு. ராசேந்திரன், புல முதன்மையர்கள் யு. பாலசுப்பிரமணியன், என். ராஜேந்திரன், மேலாண்மைத் துறை இயக்குநர் காமராஜ், தேர்வு நெறியாளர் கோ. கரிகாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








