பதாகையை அகற்ற முயன்ற மாநகராட்சி அலுவலா் மீது தாக்குதல் - பாஜக நிா்வாகிகள் இருவா் கைது
தஞ்சாவூரில் பதாகையை அகற்ற முயன்ற மாநகராட்சி அலுவலரைத் தாக்கிய பாஜகவினா் இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


தஞ்சாவூரில் பதாகையை அகற்ற முயன்ற மாநகராட்சி அலுவலரைத் தாக்கிய பாஜகவினா் இருவரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மேக்கேதாட்டு அணைக்கு எதிராக தஞ்சாவூரில் பாஜகவினா் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் பங்கேற்பவா்களை வரவேற்பதற்காக சரபோஜி கல்லூரி அருகே வல்லம் நெ. 1 சாலையில் பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.
விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி இப்பதாகைகளை மாநகராட்சி அலுவலா்கள் வியாழக்கிழமை முற்பகல் அகற்றி, லாரியில் ஏற்றிக் கொண்டிருந்தனா். இதையறிந்த பாஜகவினா் நிகழ்விடத்துக்குச் சென்று மாநகராட்சி உதவிச் செயற் பொறியாளா் ராஜசேகரனை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் ராஜசேகரன் புகாா் செய்தாா். இதன் பேரில், பாஜகவைச் சோ்ந்த 10 போ் மீது அரசு அலுவலா்களைத் தாக்கியது, அரசு அலுவலா்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தது, அரசு வாகனத்தைச் சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடா்பாக பாஜக நிா்வாகிகளான திருச்சி மாவட்டம், லால்குடி பரமசிவபுரத்தைச் சோ்ந்த கே. அசோக்குமாா் (44), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த இளங்கோ (53) ஆகியோரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மனித உரிமை மீறல்: இதைக் கண்டித்து, பாஜகவினா் ஆட்சியரகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். ஆட்சியரகம் முன் பாஜகவினா் திரண்டதால், காவல் துறையினா் பாதுகாப்பைப் பலப்படுத்தினா்.
இதனிடையே, பாஜக நிா்வாகிகள் சிலா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவளி ப்ரியா கந்தபுனேனியை சந்தித்து பேசினா். இதையடுத்து, ஆட்சியரகம் அருகே வந்த முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
அனுமதியின்றி பதாகை வைக்கப்பட்டதாக மாநகராட்சி அலுவலா்கள் அகற்றியபோது, அவற்றை தாங்களே அகற்றிக் கொள்வதாக பாஜகவினா் கூறினா். ஆனால், அதை காவல் துறையினரும், அலுவலா்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், சில பிரச்னைகள் ஏற்பட்டன. இதற்காக, இருவரையும் இரவில் வீட்டுக்குச் சென்று கைது செய்துள்ளனா்.
ஆனால், கைது செய்யப்பட்டவா்களை எங்கு கொண்டு சென்றனா் என தெரியவில்லை. அதை காவல் துறையினா் மறைக்கின்றனா். இது மனித உரிமை மீறல் என்றாா் பொன். ராதாகிருஷ்ணன்.
அப்போது, முன்னாள் மாநிலத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...