தஞ்சாவூர்: திருவையாறு காவிரி படித்துறையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி, பழங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைத்து புதுமண தம்பதிகள் மற்றும் மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் காவிரியை வரவேற்கும் விழாவாகும். காவிரி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து காவிரி தாயை வழிப்படுவார்கள். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி புஷ்ப மண்டபத்தில் ஆடிப்பெருக்கு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடி வருகின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.