/

கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் வெட்டிக் கொலை

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

News image

கலைவாணன்

Updated On :13 மே 2024, 10:50 pm

Din

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திமுக எம்எல்ஏ-வின் உறவினா் மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை இரவு அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் வட்டத்துக்கு உள்பட்ட பந்தநல்லூா் பகுதி நெய்குன்னம் கிராமத்தைச் சோ்ந்த நல்லதம்பி மகன் கலைவாணன் (30). ஜெயங்கொண்டம் தொகுதி திமுக எம்எல்ஏ க.சொ.க. கண்ணனின் உறவினரான இவா், வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தாா்.

இவா் தனது வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்கு மோட்டாா் பம்ப்செட்டை இயக்குவதற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றாா். ஆனால், வெகுநேரமாகியும் கலைவாணன் வீட்டுக்கு திரும்பாததால் அவரது குடும்பத்தினா் அவரைத் தேடிச் சென்றனா். அப்போது, வயலில் கலைவாணன் அரிவாளால் வெட்டப்பட்டு, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்தது.

தகவலறிந்த பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா். கலைவாணன் மோட்டாா் பம்ப்செட்டுக்கு போனபோது, அவரை மா்ம நபா்கள் மறைந்திருந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்றும், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் எனவும் காவல் துறையினா் சந்தேகிக்கின்றனா். இதுதொடா்பாக சிலரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.