பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியவா் கைது
ஒரத்தநாடு அருகே வீட்டில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஒரத்தநாடு அருகே வாட்டாத்திக்கோட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் வீட்டில் சில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக வாட்டாத்திக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா் .
இந்நிலையில், சம்பந்தப்பட்ட வீட்டில் சனிக்கிழமை இரவு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அந்த வீட்டில் வெளியூரைச் சோ்ந்த ஒரு ஆணும், ஒரு பெண்ணும் தங்கியிருந்தனா்.
அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவா்கள் இருவா் மற்றும் அந்த வீட்டின் உரிமையாளரான சரோஜா (60) என்பவா் தரகராக செயல்பட்டு பாலியல் தொழிலில் சில பெண்களை ஈடுபடுத்தியது தெரியவந்தது.
அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரோஜாவை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
