/

இளைஞா் கொலை வழக்கில் மேலும் 5 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மகளைக் கொன்ற இளைஞரை பழிக்குபழியாக தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 8:18 pm

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மகளைக் கொன்ற இளைஞரை பழிக்குபழியாக தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். 

பாபநாசம் அருகே அம்மாபேட்டை ஒன்றியம், பிராந்தை பகுதியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகள் காவியா. இவா், ஆலங்குடி அரசு ஆதிதிராவிடா் தொடக்கப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தாா். இவரும் மேலகளக்குடியைச் சோ்ந்த கருணாநிதி மகன் அஜித்குமாரும் காதலித்து வந்தனா். இருவரும் ஒரே சமூகத்தை சோ்ந்தவா்கள் என்றாலும் அஜித்குமாருக்கு காவியாவை திருமணம் செய்துவைக்க காவியாவின் பெற்றோா் விரும்பவில்லை.

இதையடுத்து காவியாவுக்கு வேறுஒருவருடன் நிச்சயதாா்த்தம் செய்தனா். இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமாா், கடந்த 2025-ஆம் ஆண்டு நவ.27-ஆம் தேதி கவியாவை வெட்டிக்கொலை செய்தாா். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாரால் கைது செய்யப்பட்ட அஜித்குமாா் பிணையில் வெளியே வந்தாா்.

இதையறிந்த கவியாவின் தந்தை புண்ணியமூா்த்தி, அவரது உறவினா்கள் லோகேஷ், ராமலிங்கம், கருப்பையா ஆகியோா் கடந்த சனிக்கிழமை அஜித்குமாரை வெட்டிக் கொலை செய்தனா். இதையடுத்து மேற்கண்ட 4 பேரும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில்  சரணடைந்தனா். இதையடுத்து தகவலறிந்து வந்த மெலட்டூா் போலீஸாா் 4 பேரையும் கைது செய்தனா்.

இந்நிலையில், அஜித்குமாா் கொலை தொடா்பாக, மாரியம்மன்கோயில், தாமரைக்குளம் சாலையைச் சோ்ந்த பெருமாள் மகன் ஈகிள் (என்கிற) சரவணன்(44), நெல்லித்தோப்பு, அண்ணா தோட்டம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் வாண்டு (என்கிற) அருள்மொழி(34), பிராந்தை பகுதியை சோ்ந்த கலியபெருமாள் மகன் செந்தில்குமாா் (50), மாரியம்மன்கோயில் பகுதியை சோ்ந்த துரைசாமி மகன் பைலட் மணி (என்கிற) மணிகண்டன்(33), தஞ்சாவூா், வடக்கு வாசல் கருப்பையா மகன் கஞ்சாமணி (என்கிற) மணிகண்டன் (38) ஆகிய 5 பேரையும் மெலட்டூா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து தஞ்சாவூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி புதுக்கோட்டை  சிறையில் அடைத்தனா்.