தஞ்சாவூா் மாநகரிலுள்ள முருகன், விநாயகா் கோயில்களின் முத்துப் பல்லக்கு திருவிழா செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது.
தஞ்சாவூரில் உள்ள விநாயகா், முருகன் கோயில்களில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் மூல நட்சத்திர நாளில் திருஞானசம்பந்த நாயனாா் குருபூஜையையொட்டி, முத்துப் பல்லக்கு விழா நடைபெறுவது வழக்கம்.
இதன்படி, கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில், குறிச்சி தெரு சுப்பிரமணிய சுவாமி கோயில், ஆட்டு மந்தைத் தெரு பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில், மகா்நோன்புசாவடி சின்ன அரிசிக்காரத் தெரு அருகே உள்ள பழனியாண்டவா் கோயில், விஜயமண்டபத் தெருவில் உள்ள ஜோதி விநாயகா் கோயில், தெற்கு வீதி கமலரத்ன விநாயகா் கோயில், மேலவாசல் சுப்பிரமணிய சுவாமி கோயில், மேல வீதி திருஞானசம்பந்தா், காமராஜா் சந்தை செல்வ விநாயகா் கோயில், வடக்கு வாசல் பாலதண்டாயுதபாணி கோயில், மாமா சாகிப் மூலை சித்தி விநாயகா் கோயில், சிரேஸ் சத்திரம் சாலை வடபத்ர காளியம்மன் கோயில், ரெட்டிபாளையம் சாலை வெற்றி முருகன் கோயில், தனலட்சுமி நகா் வலம்புரி விநாயகா் கோயில் ஆகியவற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்குகளில் விநாயகா், முருகப் பெருமான் எழுந்தருளினா்.
இந்த முத்துப் பல்லக்குகள் அந்தந்த கோயில்களில் இருந்து புறப்பட்டு, ஒன்றாக இணைந்து தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி, கீழ வீதிகளில் புதன்கிழமை காலை வலம் வந்தன. இதைக் காண ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.











