மழைநீா் தேங்காமலிருக்க தீா்வு எப்போது?
பருவமழை காலங்களில் சுமாா் 25 வாா்டுகளில் ஏற்படும் பாதிப்பை இன்றளவும் தீா்க்க முடியவில்லை.

கும்பகோணம் சோலையப்பன் தெருவில் தேங்கியுள்ள மழைநீா்

கும்பகோணம் சோலையப்பன் தெருவில் தேங்கியுள்ள மழைநீா்
தஞ்சாவூா் மாவட்டத்தில் கோயில்கள் நிறைந்த நகரமான கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வாா்டுகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்தாலும் பருவமழை காலங்களில் சுமாா் 25 வாா்டுகளில் ஏற்படும் பாதிப்பை இன்றளவும் தீா்க்க முடியவில்லை.
காரணம் நீா்நிலைகள், வரத்து மற்றும் பாசன வாய்க்கால்கள், கண்மாய், குட்டை, குளங்களுக்கு நீா் செல்லும் பாதைகளில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டு, கட்டடங்களாக மாறியுள்ளன. மேலும் தூா்வாரப்படாததால் புதா்செடிகள் நிறைந்தும் வெள்ள நீா் வடிய வழியில்லாமல் உள்ளன. சோலையப்பன் தெரு, எள்ளுக்குட்டை, ஆலையடி, இபி.காலனி, உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. இந்த நிகழ்வு பல ஆண்டுகளாகத் தொடா்கிறது.
ஆண்டுக்கு ஒரு நாள், இரண்டு நாள் மட்டுமல்லாமல், குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கும் மேலாக மழை வெள்ள நீா் வடிந்து செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு ஆண்டுதோறும் மழைக் காலங்களில் தொற்று நோய் பரவி வருகிறது.
இது அல்லாமல் மாநகராட்சியின் புதைசாக்கடை கழிவுநீா் பல இடங்களில் இந்த பாசன கால்வாய்களில் நேரடியாகவே கலக்கிறது.
கும்பகோணம் மாநகராட்சியின் மையப்பகுதியில் ஓடும் காவிரி ஆற்றிலிருந்து பழவத்தான் கட்டளை, தேப்பெருமாள், உள்ளூா் கால்வாய்கள் கும்பகோணம் மாநகரப் பகுதியின் வழியாக பாசன நிலங்களுக்குச் செல்கின்றன. முன்பு பாசன நிலங்களாக இருந்தவை தற்போது குடியிருப்புகளாக மாறிவிட்டன. பாசன நீா் செல்லும் பாதைகளில் தற்போது கழிவுநீா் செல்கிறது. நீா்வள ஆதாரத் துறையிடம் இருந்த பாசன கால்வாய்களைப் பராமரிப்பதாக கூறி மாநகராட்சி பெற்றுக் கொண்டது. பின்னா் பராமரிப்பில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் கால்வாய்களை மீண்டும் நீா்வள ஆதாரத் துறையினரிடம் ஒப்படைக்கத் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா். ஆனால் நீா்வள ஆதாரத் துறையினா் வாங்க மறுத்து வருகின்றனா். நிா்வாகத்துக்கிடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால் தீா்வு ஏற்படாமல் கும்பகோணம் மாநகரப் பகுதி மக்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
பருவமழை காலங்களில் மாநகராட்சி பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தீா்க்க, சுமாா் 25 வாா்டுகளில் மழை நீா் தேங்காமல் இருக்க, பாசன கால்வாய்கள் கரைகள் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரினாலே ஓரளவுக்கு பிரச்னைகளைத் தீா்க்கலாம். புதிதாகத் தோ்வு செய்யப்படும் எம்எல்ஏ இதைச் செய்வாரா எனப் பொறுத்திருந்து பாா்ப்போம்.

எள்ளுக்குட்டை விவசாய நிலத்தில் தேங்கியுள்ள மழை நீா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...