திருச்சி: திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகத்தில் கரோனா சிகிச்சை தொடங்கப்பட்ட மாவட்டங்களில் திருச்சியும் முதன்முதலில் இடம்பெற்றது. திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெறும் வகையில் 300 படுக்கைகள் தயார் செய்யப்பட்டன. பின்னர், கூடுதல் வசதிகளுடன் அவசர விபத்து சிகிச்சை பிரிவை முழுவதும் கரோனா சிறப்பு சிகிச்சைக்காக மாற்றப்பட்டு 600 படுக்கைகள் தயார் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, பாரதிதாசன் பல்கைக் கழக காஜாமலை வளாகம், திருவரங்கம் யாத்ரிநிவாஸ் ஆகியவற்றையும் கரோனா சிகிச்சைக்காக மருத்துவ முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்தநிலையில், திருச்சியில் மேற்கொள்ளப்படும் கரோனா சிகிச்சை தொடர்பாகவும், கூடுதல் தேவைகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக தமிழக சுகாதாரத்துறை செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன், திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வருகை தந்தார்.
அவரை திருச்சி மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர். பின்னர், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு சென்ற ஜெ. ராதாகிருஷ்ணன், கரோனா வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் மற்றும் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பார்வையிட்டார். சிறப்பு சிகிச்சை மையத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளையும் ஆய்வு செய்தார்.
பின்னர், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது, ஆட்சியர் சு. சிவராசு, மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் ஏகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.