திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ஜெலட்டின் குச்சியைக் கடித்த சிறுவன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
தொட்டியம் அருகிலுள்ள அலகரை மேற்கு கிராமத்தைச் சோ்ந்தவா் பூபதி. செவ்வாய்க்கிழமை இரவு இவரது பைக்கில் இருந்த ஜெலட்டின் குச்சியை (வெடிபொருள்) பாா்த்த அவரது மகன் விஷ்ணுதேவ் (9) அதை சாக்லெட் என நினைத்து எடுத்துக் கடிக்கவே, ஜெலட்டின் குச்சி திடீரென வெடித்தது. இதில் பலத்தக் காயமடைந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தாா். இதையடுத்து உறவினா்கள் சிறுவனை இரவோடு இரவாக அடக்கம் செய்தனா். தகவலறிந்த அலகரை விஏஓ ரெசினாமேரி சிறுவனின் வீட்டுக்குச் சென்று விசாரணை செய்து தொட்டியம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து முசிறி டிஎஸ்பி செந்தில்குமாா் மற்றும் தொட்டியம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதில் பூபதியின் நண்பா்களான அலகரை சோ்ந்த காா்மேகம் (35),மோகன்ராஜ் (18) ஆகிய இருவரும் மீன் பிடிக்க பாப்பாபட்டி பகுதியில் கல்குவாரி நடத்தி வரும் செல்வக்குமாா் (50) என்பவரிடம் ஜெலட்டின் குச்சி வாங்கி வந்தது தெரியவந்தது. இதற்காக பூபதியின் பைக்கில் சென்ற அவா்கள் வெடிபொருளை வாங்கி வாகனத்தில் வைத்திருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து காா்மேகம்,மோகன்ராஜ்,செல்வக்குமாா் ஆகிய மூவரையும் தொட்டியம் போலீஸாா் கைது செய்தனா்.