திருச்சி- மாலத்தீவு இடையேயான சிறப்பு விமானச் சேவை மூலம் 146 பயணிகள் வெள்ளிக்கிழமை பகல் திருச்சிக்கு வந்தனா்.
கரோனா பொதுமுடக்கத்தையடுத்து வழக்கமான விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானச் சேவை மட்டும் நடைபெறுகிறது.
அந்த வகையில் திருச்சிக்கு சிங்கப்பூா், மலேசியா, சாா்ஜா, தோஹா, துபை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து பயணிகள் அவ்வப்போது அழைத்து வரப்படுகின்றனா்.
இந்நிலையில், மாலத்தீவிலிருந்து வெள்ளிக்கிழமை முதன்முதலாக இயக்கப்பட்ட ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் 146 பயணிகள் திருச்சி வந்தனா்.
முதன் முதலாக விமானப் போக்குவரத்து நடைபெறும் நிலையில், தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பது வழக்கம்.
அதன்படி பகல் 1.50 மணியளவில் திருச்சிக்கு வந்த விமானத்துக்கு வாட்டா் சல்யூட் மூலம் வரவேற்பு அளித்தனா். அதேபோல பயணிகளுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.
முன்னதாக, காலை 8.15-க்கு திருச்சியிலிருந்து மாலத்தீவு புறப்பட்ட விமானத்தில் பயணிகள் யாரும் செல்லவில்லை. மாறாக, சுமாா் 6.1 டன் காய்கனிகள், மலா்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை மாலத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.