/

மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: தாளக்குடி, கீரமங்கலம் கிராம மக்கள் ஆட்சியரகத்தில் முற்றுகை

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாளக்குடி, கீரமங்கலம் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
திருச்சி ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்ணாவில் போராட்டத்தில் ஈடுபட்ட தாளக்குடி கிராமத்து பொதுமக்கள்.
Updated On :23 ஜனவரி 2025, 9:23 pm

Din

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து தாளக்குடி, கீரமங்கலம் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆட்சியரக முன்புற வளாகத்தில் அமா்ந்து மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறுகையில், ஊராட்சியில் தீா்மானம் நிறைவேற்றி வழங்கிய பகுதிகளை மட்டுமே இணைப்பதாக கூறிவிட்டு, இப்போது அரசாணையில் எங்களது கிராமங்களையும் இணைத்துள்ளனா். மாநகராட்சியுடன் எங்களது கிராமங்கள் இணைக்கப்பட்டால், மத்திய, மாநில அரசுகளால் இதுவரை கிடைத்து வந்த பல்வேறு திட்டப் பயன்களை பெற முடியாத சூழல் உருவாகும். எனவே, எங்களது கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்றனா்.

இந்தப் போராட்டம் காரணமாக 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆட்சியரகத்தில் பரபரப்பு காணப்பட்டது.

தகவலறிந்து வந்த வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். தாளக்குடி, கீரமங்கலம் ஊராட்சிகள் மட்டுமின்றி பலவேறு ஊராட்சி மக்களும் எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்து வருகின்றனா். அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தாளக்குடி, கீரமங்கலம் மக்களின் கோரிக்கை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஊராட்சி மக்களின் சாா்பில் ஒரு சிலா் மட்டும் ஆட்சியரகத்துக்குள் சென்று கோரிக்கை மனு அளித்துவிட்டு திரும்பினா்.