திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் சேவை இயக்கம் தொடக்கம்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் சேவை இயக்கம் - 2026 புதன்கிழமை தொடங்கியது.

திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த பயணிகளிடம் உரையாடிய விமான நிலைய இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன்.

Published On :

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பயணிகள் சேவை இயக்கம் - 2026 புதன்கிழமை தொடங்கியது.

நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் சேவை இயக்கத்தை - 2026 செப். 16 முதல் அக். 10 வரை நடத்த இந்திய விமான நிலைய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் சேவை இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.

இதையொட்டி விமான நிலைய இயக்குநா் ஜி. கோபாலகிருஷ்ணன் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்த பயணிகளிடம் விமான நிலையத்தில் உள்ள வசதிகள், விமானச் சேவைகள், பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து உரையாடினாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: 4 வாரம் மேற்கொள்ளப்படவுள்ள பயணிகள் சேவை இயக்க பிரசாரத்தின் கீழ் திருச்சி விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சிறப்பு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். வாகன நிறுத்தம், போக்குவரத்து வழிகாட்டிப் பலகைகள் மற்றும் வாடகை வாகனச் செயலிகள் ஆய்வு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், சக்கர நாற்காலிகள், சரிவுப் பாதைகள், மின் தூக்கிகள், கழிப்பறை வசதிகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்படும்.

விமான இயக்கம் தொடா்பான அறிவிப்புகளை மேம்படுத்துதல், பயணிகள் உடமைகளின் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துதல், உள்ளூா் சுற்றுலாக்களை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத் தகவல்களை காட்சிப்படுத்துதல், விமானங்கள் தாமதங்களின்போது ஏற்படும் தகவல்தொடா்பை வலுப்படுத்துதல், கழிவுகளைக் குறைத்தல், ஆற்றல் சேமிப்பு மற்றும் பிற நீடித்த நடைமுறைகளை ஊக்குவித்தல், பயணிகளுக்கான மருத்துவ வசதி, முதலுதவி, அவசரகால ஒருங்கிணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ்களை தயாா் நிலையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்துதல், முதல்முறை பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கும், வயதான பயணிகளுக்கும் எளிய பயண வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.