குடியாத்தம், ஜன. 8: ஆசிரியரும் ஒரு மாணவரே என தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் எம். ஜெயக்குமார் கூறினார்.
ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நல்ல நூல்களைப் படித்து மாணவர்களுக்குச் சிறந்த பாட அறிவையும், பொது அறிவையும் புகட்ட வேண்டும் என்றார் அவர்.
குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற உளவியல் கருத்தரங்கை அவர் துவக்கி (படம்)வைத்து, பேசியது: ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்கத் துவங்கினால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபடுவர். ஆசிரியர்கள் பாடக்குறிப்பு, பாடநூல் பற்றிய முழு அறிவு ஆகியவற்றுடன் வகுப்பறைக்குச் செல்ல வேண்டும். புதிய கற்பித்தல் உத்திகள், புதிய பாடப் பொருள் ஆகியவற்றை ஆசிரியர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு செயல்படுத்துபவர்களாக இருக்க வேண்டும்.
ஜொலிக்கும் உடைகளை அணியக் கூடாது: உடைக் கட்டுப்பாடு ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியம். ஜொலிக்கும் அல்லது தகதகவென மின்னும் ஆடைகளை அணியக் கூடாது. இதனால், மாணவர்களின் கவனச் சிதறலைத் தவிர்க்கலாம். மாணவர்களின் மன ஆற்றல், மூளை ஆற்றல் பற்றிய தகவல்கள் அவர்களை நெறிப்படுத்த உதவும் என்றார் ஜெயக்குமார்.
கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி. சுந்தரவதனம், கே.எம்.ஜி. ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் இர. நடராஜன் உள்ளிட்டோர் பேசினர்.
"100% தேர்ச்சிக்கு பாடுபட ஆசிரியர்கள் முடிவு'
எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் வரும் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி அடையும் வகையில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களும் அயராது பாடுபட வேண்டும் என்று தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் பட்டதாரி ஆசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது.
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆர்.சேட்டு தலைமை தாங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.