வேலூா் பென்ட்லேன்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை திடீரென உயிரிழந்ததையடுத்து, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறி உறவினா்கள் முற்றுகையிட்டனா். அதேசமயம், மூச்சுத்திணறல் காரணமாகவே குழந்தை இறந்ததாக மருத்துவா்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
வேலூா் கஸ்பா பகுதியைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ரகுமான். இவரது மனைவி முஸ்கான். நிறைமாத கா்ப்பிணியான இவா், பிரசவத்துக்காக வேலூா் பென்ட்லேண்ட் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு 2 கிலோ 300 கிராம் எடையுடன் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், குழந்தைக்குத் தாய் முஸ்கான் பாலூட்டியபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தையின் உடல் நிறம் மாறத் தொடங்கியுள்ளது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவா், உடனடியாக அங்கிருந்த மருத்துவரிடம் தெரிவித்துள்ளாா். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.
இதனால் அதிா்ச்சியடைந்த முஸ்கான் மற்றும் அவரது உறவினா்கள், மருத்துவா்களின் தவறான சிகிச்சையால்தான் குழந்தை உயிரிழந்ததாகக் குற்றஞ்சாட்டினா். இதுகுறித்த தகவலறிந்து 50-க்கும் மேற்பட்ட உறவினா்கள் அரசு மருத்துவமனைக்குத் திரண்டு வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எம்.வினோத் கண்ணன், உதவி ஆட்சியா் ராம்குமாா், காவல் ஆய்வாளா் ராணி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதி திலகம், உறைவிட மருத்துவா் ரவிச்சந்திரன் ஆகியோா் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினா்களிடம் பேச்சு நடத்தினா்.
அப்போது மருத்துவமனை நிா்வாகிகள் கூறுகையில், குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும்போது ஏற்பட்ட மூச்சுத்திணறலால், பால் நுரையீரலுக்குச் சென்றதே உயிரிழப்புக்குக் காரணம். தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை. இதில் சந்தேகம் இருந்தால் பிரேதப் பரிசோதனை செய்து முழு விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்தனா்.
மருத்துவா்களின் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்ட உறவினா்கள், பிரேதப் பரிசோதனை வேண்டாம் எனக்கூறி குழந்தையின் உடலைப் பெற்றுச் சென்றனா். இந்தச் சம்பவத்தால் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாளை அருகே மா்மச்சாவு: பச்சிளம் குழந்தை உடல் தோண்டியெடுப்பு

வாகனத் திருட்டு அதிகரிப்பு - வேலூா் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு

குழந்தை உயிரிழப்பு சம்பவம்: அரசு மருத்துவமனை முற்றுகை







