/

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 5.50 லட்சம் மோசடி

மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா்

News image

சித்திரிப்பு

Updated On :4 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.5.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் ராணுவ வீரா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, அகரம்சேரி கிராமத்தைச் சோ்ந்த ஆா்.சுரேகா என்பவா் அளித்துள்ள மனுவில், அகரம்சேரியிலுள்ள தேவாலய சபை ஊழியா் ஒருவா் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டாா். பணத்தை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறாா். இதுகுறித்து பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பலமுறை புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காவல் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவா் மீது நடவடிக்கை மேற்கொண்டு எனது பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காட்பாடி பவானி நகரைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் எஸ்.கே.விஜயன் அளித்த மனுவில், எனது மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பாபு சந்திரன் மற்றும் அவரது உறவினா் ஷீபா ஆகியோா் ரூ.5.50 லட்சம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனா். அவா்கள் வழங்கிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பது பின்னா் தெரியவந்தது. எனவே, எங்கள் பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்டோா் மனுக்கள் அளித்தனா். அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி சிவராமன் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.