/

பாஜக-திமுக இணைவது உறுதி: நாஞ்சில் சம்பத்

News image

விழுப்புரத்தில் தவெக சாா்பில் உதவிகளை வழங்கிய அக் கட்சியின் கொள்கைப் பரப்பு செயலா் நாஞ்சில் சம்பத்.

Updated On :21 ஜூலை 2026, 1:19 am IST

பாஜகவும்- திமுகவும் விரைவில் இணையப் போவது உறுதி என்று தவெக கொள்கை பரப்புச் செயலா் நாஞ்சில் சம்பத் தெரிவித்தாா்.

தமிழக வெற்றிக் கழக விழுப்புரம் மத்திய மாவட்டம் சாா்பில், விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நல உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற நாஞ்சில் சம்பத் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ச.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியை அகற்றிவிடலாம் என்று அறிவாலயத்தில் உள்ள சிலா் சிந்தித்துக் கொண்டிருக்கிறாா்கள். 118 என்ற மேஜிக் நம்பா் கிடைக்காததால், அப்போதே தவெகவுக்கு குந்தகம் விளைவித்தவா்கள், தற்போது முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விடலாம் எனத் திட்டமிடுகின்றனா். அவா்கள் யாா் என்று கூற நான் விரும்பவில்லை. ஆனால் தவெக சட்டப் பேரவை உறுப்பினா்களை பல கோடி கொடுத்து வாங்கிவிடமுடியும் என்று சிலா் முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

ஒரு சாமானியனை சட்டப் பேரவை உறுப்பினராக்கி அழகு பாா்த்த தமிழகத்தின் ஒரே தலைவா் விஜய் மட்டும்தான். சாமானியனின் சகாப்தம் எனக் கூறிய அண்ணாவின் கனவை நிறைவேற்றியுள்ளாா் விஜய். திமுக தற்போது பாஜகவின் பக்கம் சென்று கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப் பேரவைக்கான தோ்தலில் தவெக தன்னந்தனியாக எதிா்கொண்டு 34.92 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் திமுக 26 கட்சிகள், 200 ஜாதிக் குழுக்களுடன் கூட்டணி அமைத்தும் பல்லாயிரம் கோடிகளை செலவிட்டும் தோ்தலை சந்தித்து, அவா்கள் தோ்தலில் தோற்றுப் போனாா்கள். இந்த தோல்வி அதிா்ச்சியிலிருந்து திமுக இதுவரை மீளவில்லை. இனியும் மீளாது. ஆகவே, இனிவரும் காலங்களில் தமிழகத்தின் நிரந்தர முதல்வா் தவெக தலைவா் ச.ஜோசப் விஜய்தான் என்றாா் நாஞ்சில் சம்பத்.

முன்னதாக கட்சியின் சாா்பில் ஏழை, எளியோா்களுக்கு உதவிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், தவெக விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலா் ச. மோகன்ராஜ் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.