நெய்வேலி: கடலூர் மாவட்டம், பண்ருட்டி வரதராஜப் பெருமாள் கோயில் தேர் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் புதன்கிழமை திருத்தேர் வெள்ளோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
பண்ருட்டி, காந்தி சாலையில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமையான இக்கோயில் இந்து சமய அறநிலையத் துறை பராமரிப்பில் உள்ளது.
இக்கோயில் பிரம்மோற்சவ விழா சித்திரை மாதம் நடைபெறும். விழாவின் 9-ஆம் நாளான சித்ரா பௌர்ணமியன்று திருத்தேர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆனால், திருத்தேர் பழுதடைந்த காரணத்தால் கடந்த அரை நூற்றாண்டாக
திருத்தேர் உற்சவம் நடைபெறவில்லை.
இந்த நிலையில், திருத்தேர் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. தேரில் இருந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டன. தேருக்கு வண்ணம் தீட்டப்பட்டு சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தது.
இதையடுத்து, திருத்தேர் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. பட்டாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் கூறி கலசத்திற்கு பூஜைகள் நடத்தினர். பின்னர், கலசத்தை தேரில் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து, திருத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. பண்ருட்டி நகர்மன்றத் தலைவர் க.ராஜேந்திரன் தலைமை வகித்து தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தார். ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு தேர் இழுத்தனர். தேர் மாடவீதி வழியாக சென்று மீண்டும் நிலையை அடைந்தது. அரை நூற்றாண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற வரதராஜப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.