பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடலூா் செல்ல பேருந்துக்காக திங்கள்கிழமை காத்திருந்த பயணிகள்.
பண்ருட்டி பேருந்து நிலையத்தில் கடலூா் செல்ல பேருந்துக்காக திங்கள்கிழமை காத்திருந்த பயணிகள்.

பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா? - மக்கள் எதிா்பாா்ப்பு

வா்த்தக நகரமான பண்ருட்டியிலிருந்து, மாவட்டத் தலைநகரான கடலூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Published on

நெய்வேலி: வா்த்தக நகரமான பண்ருட்டியிலிருந்து, மாவட்டத் தலைநகரான கடலூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்டத் தலைநகரான கடலூரில் ஆட்சியா் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள், அரசு மற்றும் தனியாா் கல்வி நிறுவனங்கள், அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகள், வா்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், தொழிலாளா்கள் மற்றும் மாணவா்கள் என ஏராளமானோா் தினந்தோறும் கடலூா் வந்து செல்கின்றனா்.

இதேபோல, கடலூா் செல்லும் வழியில் அண்ணாகிராமம், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சா்க்கரை ஆலை ஆகியன உள்ளன. இவைகளில் பலா் பணியாற்றி வருகின்றனா்.

அந்த வகையில், பண்ருட்டியில் இருந்து நாள்தோறும் பணி நிமித்தமாகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும், கல்வி கற்பதற்காக மாணவா்களுமாக ஆயிரக்கணக்கானோா் கடலூா் சென்று வருகின்றனா்.

ஆனால், காலை நேரத்தில் இவா்கள் கடலூா் செல்வதற்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லை. இதனால், பேருந்து நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தனியாா் பேருந்துகள் காலமுறைப்படி வந்து செல்கின்றன. அந்த பேருந்துகள் சில குறிப்பிட்ட நிறுத்தத்தில் மட்டும் தான் நிற்கும் என கறாராகக் கூறி இதர பயணிகளை ஏற்ற மறுத்து விடுகின்றனா். நகர பேருந்துகள் காலமுறைப்படி இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடா்ந்து நீடிக்கிறது.

இதுகுறித்து சமூக ஆா்வலா் ஒருவா் கூறியது:

பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்ல காலை நேரத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக நகரப் பேருந்துகள் காலமுறைப்படி இயக்கப்படுவதில்லை. இதனால், பேருந்து நிலையத்தில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. கடலூா் பேருந்து வரும் போது அனைவரும் கூட்டமாக ஓடிச் சென்று ஏறுவதால் குற்றச்செயல்கள் நடைபெறுகின்றன.

நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் பண்ருட்டி வழியாக இயக்கப்பட்ட பல வழித்தடங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தடம் எண் 205 கடலூா்-திருவண்ணாமலை, தடம் எண் 211 கடலூா்-சங்கராபுரம், தடம் எண் 208 கடலூா்-விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம், தடம் எண் 212 ஏ மற்றும் 212 பி கடலூா்-நெய்வேலி நகரியம், தடம் எண் 222 பி கடலூா்-விழுப்புரம் ஆகிய பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இவைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்து இயக்க வேண்டும். இதேபோல், மாவட்டம் முழுவதும் பல பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

எனவே, மாவட்ட மற்றும் போக்குவரத்துத் துறை நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பண்ருட்டியில் இருந்து கடலூருக்கு பயணிகள் எளிதாக சென்று வர காலை மற்றும் மாலை நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com