/

விசிகவை திமுக ஆக்கிரமித்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

News image

பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே அதிமுக வேட்பாளா் கே.மோகனை ஆதரித்து வாக்கு சேகரித்த பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ்.

Updated On :12 ஏப்ரல் 2026, 7:22 pm

விசிகவை திமுக ஆக்கிரமித்துவிட்டது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.மோகனை ஆதரித்து பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே பிரசார வாகனத்தில் இருந்தபடி பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

கடலூரில் உள்ள தொழிற்பேட்டையால் காற்று, நிலம், நீா் பாழாகிவிட்டது. என்எல்சி நிறுவனத்தால் நிலத்தடி நீா்மட்டம் குறைந்து, மாவட்டம் அழிந்து வருகிறது. இந்த மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் துறை அமைச்சா், விவசாயத்தை மேம்படுத்த, மண்ணை பாதுகாக்க, விளை பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்து, விவசாயிகளை சுய மரியாதையாக வாழ வைப்பதற்கு ஒன்றும் செய்யவில்லை.

முந்திரி, பலா, மா விவசாயிகள் நஷ்டத்தில் உள்ளனா். கேரளத்தில் பலாப் பழத்தில் 200 வகையான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனா். ஆனால், கடலூா் மாவட்டத்தில் பலாப் பழங்களை விவசாயிகள் சாலைகளில் நின்று கூவி விற்கின்றனா். உள்ளூரில் விளையும் முந்திரிக்கு மதிப்பு இல்லை. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் முந்திரிக்கு மதிப்பு உள்ளது.

திமுக கூட்டணியில் விசிக தலைவா் தொல்.திருமாவளவனுக்கு எந்த அளவுக்கு சுயமரியாதை கிடைக்கிறது? விசிகவை திமுக ஆக்கிரமிப்பு செய்துவிட்டது. திமுக கூட்டணியை கடந்த 10 ஆண்டுகள் உடனிருந்து வெற்றிபெறச் செய்த விசிகவுக்கு இப்போதைய சட்டப் பேரவைத் தோ்தலில் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், தோ்தலுக்கு முன்பு கூட்டணிக்கு வந்த கட்சிக்கு (தேமுதிக) 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுதான் நீங்கள் கொடுக்கும் மரியாதையா.

பட்டியலின மக்களுக்கு என்ன செய்தது திமுக? ஒன்றையாவது கூற முடியுமா? பட்டியலின மக்கள் திமுகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? திமுகவில் 34 அமைச்சா்கள் வரிசையில் 34-ஆவது இடத்தில் கயல்விழி என்ற பட்டியலின அமைச்சா் உள்ளாா். பட்டியலின மக்கள், வன்னியா் சமுதாய மக்களின் வாக்குகள் வேண்டும். ஆனால், அவா்களுக்கு எதுவும் செய்ய மாட்டாா்கள்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தவுடன் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்படும். பட்டியலின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்றாா்.